மனநலம் பாதித்த கணவருடன் செக்ஸ் வைத்தால் ஆயுள் தண்டனை... மனைவிக்கு யு.கே. கோர்ட் எச்சரிக்கை!
இங்கிலாந்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். இந்த விஷயத்தில் அவர்களை கட்டாயப்படுத்தும் நபர்களும் குற்றவாளிகளே. சட்டப்படி அவர்களது திருமணம் செல்லாது. சட்டத்தை மீறி ரகசியமாகத் திருமணம் செய்து கொள்பவர்களின் திருமணமும் ரத்து செய்யப்படும்.
இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியப் பெண்ணொருவர், இங்கிலாந்தில் விநோத வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், ‘இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தன்னை இங்கிலாந்தில் வாழும் சீக்கிய குடுமப்த்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கடந்த 2009ம் ஆண்டு பஞ்சாபில் வைத்து திருமணம் செய்து வைத்ததாகவும், ஆனால் அவர் மனநிலை சரி இல்லாதவர் என்பது திருமணத்துக்குப் பிறகே தனக்கு தெரிய வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், தாங்கள் இப்போது இங்கிலாந்தில் வசித்து வருவதாகவும், எனவே, தங்கள் திருமண பந்தத்தை ரத்து செய்யக் கூடாது எனவும் கூறியிருந்தார். ஏற்கனவே, இவர்களது திருமணத்தை ரத்து செய்யுமாறு பர்மிங்காமில் இதற்கென உள்ள விசேஷ கோர்ட்டில் அரசுத்தரப்பு முறையிட்டதையும், பிறகு அந்த வாலிபரை, மனநல மையத்தின் பராமரிப்புக்கு அனுப்பி வைத்ததையும் விவரமாக அதில் தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மனநிலை பாதிக்கப்பட்ட அந்நபருடன் அவருடைய மனைவி எந்தவகையிலாவது பாலியல் ரீதியாக நெருக்கம் வைத்துக் கொண்டால், அந்த வாலிபர் குற்றச்செயலில் பாதிக்கப்பட்டவராகி விடுவார் என்றும், அதன் அடிப்படையில் அவருடைய மனைவிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும்' என தீர்ப்பு வழங்கினார்.
அதே நேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட கணவருடன் தொடர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ள அப்பெண்ணின் மன வலிமையை பாராட்டிய நீதிபதி, அவர்களது திருமணத்தை ரத்து செய்ய மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.