கூர்க்காலாந்து.. மமதா 72 மணி நேர கெடு! போராட்டக் குழு நிராகரிப்பு!!
கொல்கத்தா: கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கைக்காக கடந்த ஒரு வார காலமாக நடத்தப்பட்டு வரும் முழு அடைப்புப் போராட்டத்தை அடுத்த 72 மணி நேரத்தில் கைவிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் போராட்டத்தைக் கைவிட முடியாது.. அரசின் அடக்குமுறையை எதிர்கொள்ள தயார் என்று கூர்க்காலாந்து போராட்டக் குழு அறிவித்திருப்பதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
தெலுங்கானா தனி மாநில அறிவிப்பைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தைப் பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்கக் கோரி டார்ஜிலிங் மலைப் பகுதியில் போராட்டம் வெடித்தது. தொடர்ந்தும் முழு அடைப்புப் போராட்டம் அங்கு நடைபெற்று வருகிறது. இந்த தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவாக செயல்பட்டதாக 3 உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை மேற்கு வங்க அரசு தடை செய்திருந்தது.
இந்த நிலையில் கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை ஏற்க முடியாது. அடுத்த 72 மணி நேரத்துக்குள் முழு அடைப்புப் போராட்டத்தை கைவிட வேண்டும் இல்லையெனில் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்தைக் கைவிட்டால் மட்டுமே கூர்க்காலாந்து கோரும் அமைப்பினருடம் மேற்கு வங்க அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.
ஆனால் மேற்கு வங்க அரசின் எச்சரிக்கையை நிராகரித்திருக்கும் போராட்டக் குழு, அரசின் அடக்குமுறையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார். அதனால் டார்ஜிலிங் மலைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.