போலி ஆவணங்களை கொடுத்தார் சோனியா மருமகன் வதேரா… ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்கா
சண்டிகர்: ஹரியானாவில் 3.53 ஏக்கர் நிலத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா போலி ஆவணங்கள் கொடுத்திருப்பதாக அம்மாநில சர்ச்சைக்குரிய ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா, பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இது சோனியா காந்திக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
ராபர்ட் வதேராவின் 'ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி' நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக குறைந்த விலைக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், அதனை அவர் டி.எல்.எப். நிறுவனத்திற்கு கைமாற்றிவிட்டு கோடிக்கணக்கான ரூபாய் ஆதாயம் அடைந்ததாகவும், இந்த ஊழலின் மதிப்பு 58 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கலாம் என கடந்த 2012 ஆம் ஆண்டு பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறினார் அசோக்.
இதனையடுத்து அவர் வகித்து வந்த நில ஆவணங்கள் மற்றும் பதிவாளர் துறையிலிருந்து மாற்றப்பட்டு, மாநில அரசின் விதை துறைக்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து அரசு நியமித்த விசாரணைக் குழு, வதேராவுக்கு நற்சான்றிதழ் வழங்கியது.
இந்த நிலையில் 3.53 ஏக்கர் நிலத்திற்கு வதேரா போலி ஆவணங்கள் கொடுத்திருப்பதாக ஹரியானா ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா, விசாரணைக் குழுவிடம் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
வதேராவுக்கும் , டி.எல்.எப். நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்திலேயே இந்த ஊழல் அரங்கேறி உள்ளதாக கூறியுள்ள அவர், ஹரியானாவில் கடந்த 8 ஆண்டுகளில் நிகழ்ந்த நில ஊழல்களை கணக்கிலெடுத்துக் கொண்டு விசாரித்தால், அதன் மதிப்பு ரூ. 20,000 கோடி முதல் ரூ3.5 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என்றார்.