எதிர்கட்சியினருக்கு பாதுகாப்பு இல்லை - தேமுதிக எம்எல்ஏ குற்றச்சாட்டு
நெல்லை: தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்கட்சியினருக்கு பாதுகாப்பு இல்லை என தேமுதிக எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தானேஸ்வரன் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை திருப்பரங்குன்றம் தொகுதி தேமுதிக எம்எல்ஏ ராஜா மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்.
பின்னர் தானேஸ்வரன் வீட்டுக்கு சென்று அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் கொலை கொள்ளை அதிகரித்து வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் எதிர்கட்சியினருக்கு பாதுகாப்பு இல்லை.
4தேமுதிக பிரமுகர்களுக்கு கூலிப்படையினர் குறி வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஓழுங்கு கெட்டு விட்டது. நெல்லையில் தேமுதிக கவுன்சிலர் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளார்.
பெண்களை கேலி செய்தவர்கள் மீதும், வைக்கோல் படப்பு மீது தீ வைத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.
குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராஜா.
இதற்கிடையே, நெல்லை தேமுதிக கவுன்சிலரை வெட்டிய 2 பேர் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.