நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில்தான் இருந்தார்: ஒப்புக்கொண்டது பாக்.!!
இஸ்லாமாபாத்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு சதிகாரனாகிய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தங்களது நாட்டில்தான் பதுங்கி இருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நவாஸ் ஷெரீப்பின் சிறப்பு தூதரான ஷர்யார் கான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இந்தியாவால் பல ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் தாவூத் இப்ராகிம். அவருக்கு எதிராக இண்டர்போல் நோட்டீஸும் விடப்பட்டிருந்தது. இந்தியாவோ பாகிஸ்தானில்தான் தாவூத் பதுங்கி இருப்பதாகவும் அவரை ஒப்படைக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
ஆனால் தாவூத் தங்களது நாட்டில் இல்லவே இல்லை என்று இத்தனை காலம் பாகிஸ்தானும் சாதித்தே வந்தது. அண்மையில் கூட ஐபிஎல் பிக்ஸிங் வழக்கில் தாவூத் பெயரும் குற்றப்பத்திரிகையில் டெல்லி போலீசாரால் சேர்க்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் இருந்ததை பாகிஸ்தான் இப்போது முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டு உள்ளது.
இதுபற்றி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சிறப்பு தூதரான ஷர்யார் கான் லண்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானில் பதுங்கி இருந்த தாவூத் இப்ராகிம் அங்கிருந்து விரட்டப்பட்டு விட்டனர். அனேகமாக அவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
மேலும் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருந்திருந்தால் அவர் கைது செய்யப்பட்டு இருப்பார். பாகிஸ்தானில் தாதாக்கள் செயல்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானின் இந்த பகிரங்க ஒப்புதல் இந்தியாவுடனான உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.