ஒடிஷாவில் சாப்பாட்டுக்கே வழியின்றி தவிக்கும் முன்னாள் மன்னர்
ஒடிஷா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள டைகிரியாவின் மன்னராக இருந்தவர் பிரஜ்ராஜ் ஷத்ரிய பிர்பால் சமுபதி சிங் மஹாபத்ரா(92). அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த அரண்மனை கடந்த 1960ம் ஆண்டு அரசுக்கு ரூ.75,000க்கு விற்கப்பட்டது. தற்போது அந்த அரண்மனையில் பெண்கள் உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
ஒடிஷாவை ஆண்ட 26 சிற்றரசர்களிள் பிரஜ்ராஜ் மட்டும் தான் தற்போது உயிரோடு இருக்கிறார். குடும்பத்தார் இன்றி அவர் புருனா கிராமத்தில் ஒரு மண் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு கண் பார்வையும் மங்கிவிட்டது, காதும் சரியாக கேட்கவில்லை. சாப்பாட்டுக்கு வழியின்றி தவிக்கும் அவருக்கு கிராம மக்கள் தான் உணவு வழங்குகின்றனர்.
புருனா கிராமத்தைச் சேர்ந்த தரணிதர் ராணா கூறுகையில்,
பிரஜ்ராஜ் காலையில் டீயும், பிஸ்கட்டும் சாப்பிடுவார். மதியம் சாதமும், தாலும் இரவு ரோட்டியும் சாப்பிடுவார். எப்போதாவது கோழிக்கறி சாப்பிடுவார் என்றார்.
பிரஜ்ராஜ் ராய்பூரில் உள்ள ராஜ்குமார் கல்லூரியில் டிப்ளமோ முடித்தார். அதன் பிறகு 1940ல் சோனேபூர் இளவரசரி ராஸ்மஞ்சரி தேவியை மணந்தார். அவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் பிறந்தனர். மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு அவருக்கு அரசு ஆண்டுக்கு ரூ.11,200 வழங்கி வந்தது. ஆனால் இந்த உதவி திட்டம் 1975ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே அவர் தனது அரண்மனையை விற்றுவிட்டு மனைவியை விட்டும் பிரிந்தார்.
அரண்மனையை விற்ற பிறகு அவர் 12 ஆண்டுகள் தனது நண்பர் கஜபதி மஹாராஜாவுடன் இருந்தார். பின்னர் ஆந்திராவில் உள்ள மாந்தஸாவின் மன்னரான தனது மூத்த சகோதரருடன் இருந்தார். பின்னர் 1987ம் ஆண்டு டைகிரியாவுக்கு வந்து ஒரு குடிசையை கட்டி அங்கு வாழ்ந்து வருகின்றார். முன்னாள் எம்.எல்.ஏ.வான அவரது மனைவி டைகிரியாவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் தான் வசிக்கிறார். ஆனால் அவர்கள் சந்தித்து பல ஆண்டுகளாகிவிட்டது.
லுங்கியுடன், தடி ஊண்டி நடக்கும் பிரஜ்ராஜை பார்த்தால் யாரும் அவர் ஒரு காலத்தில் மன்னராக இருந்தார் என்று கூற முடியாது.