இலவசங்களால் ஆபத்துதான் அதிகம்: தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக கருத்து
"மக்களுக்கு அரசுகள் இலவசப் பொருட்கள் வழங்குவதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்ட அறிவுரையின்படி, டெல்லியில் இன்று இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்டியது. அப்போது, இலவசப் பொருட்களுக்கு எதிரான கருத்தை தே.மு.தி.க. முன்வைத்தது.
"தேர்தலில் என்ன செய்தும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில அரசியல் கட்சிகள், வாழ்வாதார வழிமுறைகளை பெருக்கும் வழிகளை ஒதுக்கி, உதாசீனப்படுத்தி, மக்களின் பணமான அரசு பணத்தை அள்ளித் தெளிக்கும் குறுகிய சிந்தனைகளில் விரயமாக்குகின்றன. இதனால் தொலைநோக்கு திட்டங்களும், நல்லாட்சியும் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற இலவச திட்டங்களை கொண்டுள்ள தேர்தல் அறிக்கைகளை நெறிமுறைப்படுத்துவதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் இதை கட்டுப்படுத்த முடியாது.
ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 127 A (3) (b) என்பதன் கீழே விவரிக்கப்பட்டுள்ள தேர்தல் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் எனப்படும். தேர்தல் சமயத்தில் எந்தவொரு வேட்பாளருக்கும் சாதகமாகவும், அவருக்கு வாக்கு சேகரிக்கும் வகையிலே பிரசுரிக்கப்படும் எந்தவொரு அறிக்கையோ, ஆவணமோ, பிரசுரமோ தேர்தல் துண்டு பிரச்சாரமாக கருதப்படும். அதனால் அதனை அச்சடித்த பொறுப்பும், அதிலே அச்சடிக்கப்பட்ட சாராம்சத்தின் பொறுப்பும் அந்த வேட்பாளரையே சாரும்.
இலவசமும் லஞ்சம்தான்
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் விவரிக்கப்படவில்லை என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு முற்றிலும் தவறானது. இந்திய தேர்தல் ஆணையம் இந்த விளக்கத்தினை உச்ச நீதிமன்றத்திலே தெரிவித்திருக்க வேண்டும். பல வேட்பாளருக்கும் சாதகமாக அச்சடிக்கப்பட்ட அறிக்கையினை கட்சி தேர்தல் அறிக்கையிலே இலவச பொருட்கள் தருவோம் என்ற ஒரு மொத்த லஞ்சத்தினை எப்படி உறுதி தர முடியும்?
தேர்தல் ஆணையம் மௌனம்
இந்த இலவசங்களால் நடந்து முடிந்த தேர்தல்கள் களங்கப்பட்டுவிட்டன என்றும், தேர்தலில் சமநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்றும் இந்திய தேர்தல் ஆணையமே, உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. அப்படியிருக்க அப்படி களங்கப்படுத்தியவர்களின் தேர்தல்களை ரத்து செய்யாமலும், நடவடிக்கை எடுக்காமலும் தேர்தல் ஆணையம் மௌனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை?
களங்கமாகும் தேர்தல் களம்
தற்போதைய சூழலிலே ‘‘எஸ்.சுப்ரமணியம் பாலாஜி - எதிர் - தமிழ்நாடு அரசு'' என்ற வழக்கின் தீர்ப்பின்படி இலவசங்களை ஆளும் கட்சி வழங்கலாம் என்றால், வரப்போகின்ற அனைத்து தேர்தல்களுக்கும் முன்பு ஆளும் கட்சிகள் குளிர்சாதனப் பெட்டி, குளிர்பதனப் பெட்டி, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என்று இலவசப் பொருட்களை அள்ளி தெளித்தால், அதனை எல்லா மாநிலங்களிலும் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டால், அவை அந்த கட்சிக்கு தேர்தலிலே சமநிலையை பாதிக்கக் கூடிய வலுவினை சேர்க்காதா? அப்போது அந்த தேர்தல் களம் களங்கப்பட்டுவிடாதா? எதிர்க்கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகளின் கதி என்ன?
நிர்வாகம் முடங்கும்
ஒரு அரசாங்கம் அல்லது ஒரு அரசியல் கட்சி ஆடம்பர பொருட்களை மக்களுக்கு நேரடியாக கொடுக்கவோ அல்லது கொடுப்பதாக வாக்குறுதியோ கொடுக்க முடியாது. அப்படி இருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. அவ்வாறு ஒவ்வொரு வருடமும் புதிது, புதிதாக இலவசப் பொருட்களை அரசாங்கம் கொடுக்க ஆரம்பித்தால் அது அரசு நிர்வாகத்தையும், நிதி ஆதாரத்தையும் முடக்கிவிடும்.
இலவசங்கள் சாதனையா?
எங்கள் கருத்துப்படி தேர்தல் ஆணையத்திற்கு ஆளும் கட்சியினர் நடத்தி வருகின்ற இலவச திட்டங்களை அவர்களின் தேர்தல் அறிக்கையிலே சாதனை என்ற பெயரிலே பிரசுரிப்பதை தடுக்க அதிகாரம் இல்லை. அவ்வாறு தேர்தல் ஆணையம் தடுக்க முடியும் என்று கூறுவது, நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய ஒன்று அல்ல.
இனி இதுபோன்ற தவறுகள்
அதனால், இந்திய தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய, மனு செய்து, இவ்விஷயத்தில் ஒரு முழுமையான தீர்ப்பினை வழங்க ஆவன செய்ய வேண்டும். ஆகையால் கடந்த தேர்தல்களில் தேர்தலை களங்கப்படுத்திய அரசியல் கட்சிகளின் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், மேலும் இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கேள்விக்குறியாகும் நேர்மை
மேற்கூறிய உச்ச நீதிமன்ற தீர்ப்பானது எல்லா கட்சிகளுக்கும் சென்றடைந்து இருக்கின்ற நிலையில் எல்லா ஆளும் கட்சிகளுமே வர இருக்கின்ற தேர்தலை சந்திக்க இலவச திட்டங்களை கையில் எடுக்கக் கூடிய சாத்தியக் கூறு அதிகரித்துள்ளது. இந்நிலை நேர்மையான ஆட்சி, ஊழலற்ற ஆட்சி மற்றும் தேர்தல் நடுநிலைமை ஆகியவற்றை சீர்குலைக்க கூடியதாகும்.
நியாயமான ஆட்சி நடைபெறுமா?
நம் நாட்டிலே பல மாநிலங்கள் கடன் சுமையிலே தத்தளிக்கக் கூடிய நிலையிலே, இவ்வாறான இலவசங்களால் தூய்மையான, நேர்மையான, நியாயமான அரசாட்சி கெட்டு மாறான எண்ணங்கள் மேல்நிலை பெறும் ஆபத்துள்ளது என தே.மு.தி.க. தெரிவித்துள்ளது.