சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தீர்ப்புக்கான தேதி மட்டும் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது.
தீர்ப்புக்கான தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவும் நீதிபதி முருகன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் நீதிமன்றங்கள் செயல்படவில்லை. இந்த நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் ரகுசுந்தரேச அய்யர் உள்பட 13 பேர் மட்டுமே ஆஜராகி இருந்தனர். ஆனால் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 10 பேர் ஆஜராகவில்லை.
ஆஜராகாதவர்களின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி முருகன் வழக்கு விசாரணையை செப்டம்பர் 6-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.