தூத்துக்குடியில் மணல் கொள்ளை: தனியார் குவாரிகளில் சிறப்புக் குழு ஆய்வு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த தனியார் மணல் குவாரிகள் மணல் எடுத்த பகுதிகளில் சிறப்பு ஆய்வுக்கு ழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரப் பகுதிகளில் மணல் அள்ளி கனிமங்களை பிரித்தெடுக்கும் தனியார் மணல் ஆலைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக கலெக்டர் ஆசிஷ் குமாருக்கு மீனவர்கள், பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தது.
இதனைத் தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின்பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, கோவில்பட்டி கோட்டாட்சியர் கதிரேசன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் வைப்பார் கலைஞானபுரம், வேம்பாரை அடுத்துள்ள பெரியசாமிபுரம் பகுதிகளில் உள்ள விவி உள்ளிட்ட தனியார் மணல் ஆலைகளில் கடந்த 6ம் தேதி இரு குழுக்களாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து கலெக்டர் ஆசிஷ்குமார் பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விவி மினரல், பிஎம்சி உள்ளிட்ட கடல் மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு தமிழக வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் வருவாய்த்துறை, சுரங்கத்துறை, சுற்றுச்சூழல்துறை மற்றும் வனத்துறையினர் அடங்கிய சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
இந்த ஆய்வுக் குழுவினர் மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஒரு மாதத்திற்குள் ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்பேரில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு ஆய்வுக் குழுவினர் இன்று வைப்பார் பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆய்வுப் பணிகளுக்கு முன்பாக ஆய்வுக் குழுவின் தலைவரான தமிழக வருவாய்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் மணல் ஆலைகளில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்புக்குழுவின் தலைவராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன்.
எனது தலைமையிலான குழுவினர் சம்மந்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வர், ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படும், குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆய்வுப்பணிகள் முடிக்கப்பட்டு முதல்வரிடம் ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்படும்.
இந்த குழுவில் துணை ஆட்சியர், நில அளவைத்துறை இணை இயக்குநர், பொறியாளர்கள், சுற்றுச்சூழல், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். ஆய்வுக் குழுவினர் மணல் எடுக்கப்பட்ட கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்வார்கள். இந்த வாரம் 3 நாட்களும், அடுத்த வாரத்தில் 2 நாட்களும் ஆய்வு மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் கூடுதல் நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும். எங்கெங்கு ஆய்வு நடத்த வேண்டும் என்பது தொடர்பான பட்டியல் மாவட்ட கலெக்டரிடம் உள்ளது என்றார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கலெக்டர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்ற ஆய்வுக்குழுவினர் வைப்பார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றர்.