காரைக்கால் வினோதினி கொலை வழக்கு: ஆக.20ல் தீர்ப்பு
காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி திருவேட்டக்குடியைச் சேர்ந்த அப்பு என்கிற சுரேஷ் (28). இவர் எம்.எம்.ஜி நகரில் வசித்து வந்த இன்ஜினியர் வினோதினியை ஒரு தலையாக காதலித்தார்.
வினோதினி காதலை ஏற்காததால் கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி அவர் மீது ஆசிட் வீசினார். இதில் படுகாயமடைந்த வினோதினி சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் 3 மாத காலம் சிகிச்சைக்குப்பின்னர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி உயிரிழந்தார்.
நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு காரைக்கால் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் முன்னிலைவில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளிப்பதாக நீதிபதி அறிவித்திருந்தார்.
இதுதொடர்பான வழக்கு புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் 20-ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் தீர்ப்பை மகளிர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
இதனிடையே குற்றவாளி சுரேஷ்-க்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று வினோதினியின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.