'தலைவா'வை ரிலீஸ் செய்யுங்கள்: மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விஜய் ரசிகர்கள்
மதுரை: தலைவா படம் ரிலீஸாகாததால் விஜய்யின் ரசிகர்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விஜய்யின் தலைவா படம் கடந்த 9ம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால் கடந்த 8ம் தேதி தலைவா படம் ஓடினால் தியேட்டர்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் வந்தது உள்ளிட்ட சில காரணங்களால் படம் ரிலீஸாகவில்லை.
இதனால் விஜய் ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டி மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்தை புறநகர் மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவர் இன்பராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தார்.
மேலும் படத்தை வெளியிடக் கோரி விஜய் ரசிகர்கள் நேற்று முன்தினம் ரயில் நிலையம் அருகே சாலை மறியல் செய்தனர். போலீசார் ரயில் நிலையத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு கூறினார். ஆனால் அவர்கள் கேட்காததால் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைந்துபோகச் செய்தனர்.