தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இறக்குமதி வரி 10% உயர்வு: தங்கம் விலை சவரனுக்கு ரூ.648 உயர்ந்தது
டெல்லி: தங்கம் மீதான இறக்குமதி வரியை 8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 648 ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் இறக்குமதி வரியும் 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவதால், இந்திய பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்த மத்திய அரசு பல்வேறு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி, எண்ணெய் பொருட்கள் மற்றும் அத்தியாவசியம் அல்லாத பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.
10 சதவிகித இறக்குமதி வரி
அதன்படி இன்று தங்கம் மீதான இறக்குமதி வரியை 8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதேபோல் வெள்ளி மற்றும் பிளாட்டினம் இறக்குமதி வரியும் 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கம், வெள்ளி விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்வை சமாளிக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையாக, இறக்குமதி மீதான வரியை உயர்த்தி வருகிறது. கடந்த ஜூன் மாதம் இறக்குமதி வரி 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது 10 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.
தங்கத்தின் விலை உயர்வு
இதனால் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இன்று சவரனுக்கு 648 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. அண்மையில் ஒரு சவரன் தங்கம் ரூ.19 ஆயிரம் வரை விலை குறைந்தது. இந்த நிலையில், தங்கத்தின் விலை படிபடியாக உயர்ந்து இன்று சவரன் 22,328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 2,791 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி 49.10 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி கிலோ 45,850 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.