3 பேரை பலிவாங்கிய காஷ்மீர் கலவரம்: பதவியை ராஜினாமா செய்த மாநில உள்துறை அமைச்சர்
கடந்த வெள்ளியன்று காஷ்மீர் மாநில ஜம்மு பகுதியில், ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடந்த இடத்தில் திடீர் வகுப்பு வாத மோதல் உண்டானது. அப்போது, இந்தியாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய ஒரு பிரிவினரை, மற்றொரு பிரிவினர் தாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து, ஜம்மு மற்றும் ரஜோரி நகரிலும் வன்முறைகள் நடந்தன.
இந்த கலவரத்தின் எதிரொலியாக கிஷ்த்வார், உதம்பூர், கதுவா, தோதா, ஜம்மு, ரஜோரி ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 7 ஹோட்டல்கள், 68 கடைகள் மற்றும் 35 வாகனங்கள் இக்கலவரத்தில் சேதமடந்ததாக தெரிகிறது.
ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து இக்கலவரப்பகுதிகளைக் கண்காணித்து வருகின்றனர். கிஷ்த்வார் மாவட்டத்தில் மட்டும் 3 பேர் கலவரத்தில் சிக்கி பரிதாபமாக பலியான நிலையில், அங்கு சுமார் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடரும் கலவரங்கள் குறித்து நேற்று, அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா, கலவரம் குறித்து நீதி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கலவரத்துக்குப் பொறுப்பேற்று அம்மாநில உள்துறை அமைச்சர் சாஜத் கிச்லூ தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் உமர் அப்துல்லா அதனை அம்மாநில கவர்னர் என்.என்.வோராவுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவர் உள்துறை அமைச்சரின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.