சீமாந்திராவில் 4 லட்சம் அரசு ஊழியர்கள் போராட்டத்தால் அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு
சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய,மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெலுங்கானா அறிவிப்புக்கு எதிராக பதவி விலகவேண்டும் என்று ஆந்திரப் பிரதேச அரசு ஊழியர் சங்கம் கெடு விதித்திருந்தது. ஆனால், அமைச்சர்கள் பதவி விலகாததைத் தொடர்ந்து 4 லட்சம் அரசு ஊழியர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள்
அரசுப் போக்குவரத்து ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் 12000 பேருந்துகள் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து சேவையும் முடங்கியதை அடுத்து பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலை நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னையிலிருந்து திருப்பதி உள்பட சீமாந்திர பகுதிக்கு செல்லும் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
பெட்ரோல் பங்க் மூடல்
சீமாந்திரா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் அனைத்தும் நேற்று நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
13 மாவட்டங்கள்
போராட்டம் காரணமாக சீமாந்திராவில் உள்ள ஸ்ரீகாகுலம், விசாகபட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
மின் வாரிய ஊழியர்களும்
மின் வாரிய ஊழியர்கள் உள்பட 53 அரசு துறைகளின் ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநில அரசின் நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முற்றிலும் முடக்கம்
இந்த போராட்டத்தில் அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30ம் தேதி முதல் சீமாந்திரா பகுதியில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அரசு ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.