சீனியர் அமைச்சர்கள் 2 பேரை நீக்க ஜெ. முடிவு! கலக்கத்தில் கோட்டை!
அதிமுக ஆட்சியில் எந்த ஒரு அமைச்சரும் நிரந்தரம் இல்லை என்பதுதான் யதார்த்தம். ஏற்கெனவே பலமுறை அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன.
இந்த நிலையில் வரும் 18ந் தேதி தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. பல அமைச்சர்களின் செயல்பாடுகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், தொடர்ந்து பல அமைச்சர்கள் மீது புகார் வந்து கொண்டு இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை பாயலாம் என கூறப்படுகின்றது.
மேலும், அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் என இரண்டு பதவிகளை வைத்துள்ளவர்களிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
குறிப்பாக, அதிமுகவினர் மீது கட்சியினர் கொடுக்கும் புகார்களை விசாரித்து ஒழுங்கு நடவடிக்கை தேவைப்படும் பட்சத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பரிந்துரை செய்வதற்கு ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது.
இதில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் அந்தக் குழு உறுப்பினர்களாக நியமிக்கபட்டனர். மேலும் சிலர் கூடுதலாக நியமிக்கப்பட்டனர்.
ஆனால் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் இரா.விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோரை நால்வர் அணி என்று அதிமுகவில் வர்ணிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த அமைச்சரவை மாற்றத்தில் நால்வர் அணியில் 2 பேரின் பதவி பறிபோகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிற அமைச்சர்களை விட இந்த நால்வர் அணி தான் பெரும் கலக்கத்தில் உள்ளது.