ரம்ஜான் கொண்டாட்டம்: பாகிஸ்தானில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், ரம்ஜான் பண்டிகை நாளன்று கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 18 எனத் தெரிய வந்துள்ளது.
ரம்ஜான் பண்டிகையொட்டி பாகிஸ்தானில் சாராய விற்பனை அதிகமாக இருந்தது. கடந்த சனிக்கிழமையன்று கராச்சி நகரில் உள்ள மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள குறிப்பிட்ட கடையில் விற்கப்பட்ட சாராயத்தை குடித்த பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. விசாரணையில் கடையில் விற்கப்பட்டது கள்ளச் சாராயம் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட ‘குடிமகன்கள்' பலர் கராச்சி ஜின்னா ஆஸ்பத்திரியிலும், மேலும் சிலர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டனர். அதில், ஜின்னா ஆஸ்பத்திரியில் 16 பேரும், இரு தனியார் ஆஸ்பத்திரிகளில் தலா ஒருவரும் என மொத்தம் 18 பேர் சிகிச்சை பலனின்ரி பலியானார்கள்.
கள்ளச்சாராயம் குடித்துப் பலியானவர்களில் இருவர் போலீசார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.