இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்கள் பலி?
மும்பை : நேற்று நள்ளிரவு தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் திடீர் என பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காணாமல் போன 18 வீரர்களும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தெற்கு மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்து ரக்சக் நீர் மூழ்கி கப்பல். நேற்று நள்ளிரவு திடீரென இக்கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது.
உடனடியாக அருகில் இருந்த மற்றொரு கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அதன் சேதாரம் தவிர்க்கப்பட்டது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. தீ விபத்தில் நீர் மூழ்கி கப்பல் பலத்த சேதமடைந்ததாக தெரிவித்துள்ளார் அதிகாரி ஒருவர். விபத்தில் இருந்து தப்பிக்க பல வீரர்கள் நீரில் குதித்ததாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இவ்விபத்தில் 3 அதிகாரிகள் உள்பட 18 வீரர்கள் காணவில்லை. தொடர்ந்து இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், இவர்கள் அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது ரஷ்யாவில் கட்டப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலாகும்.
அருகில் இருந்த நீர்மூழ்கியும் சேதம்:
நேற்றிரவு நடந்த வெடிவிபத்தில் சிந்து ரக்சக் நீர்மூழ்கிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் சிந்து ரத்னா நீர்மூழ்கியும் சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தையடுத்து அந்தப் பகுதி முழுவதும் நீர்மூழ்கியின் பாகங்களும், ஏவுகணைகளின் பாகங்களும் சிதறிக் கிடக்கின்றன.
இதன் பேட்டரியில் ஏற்பட்ட பிரச்சனையால் வெடிவிபத்து ஏற்பட்டதாகவும், ஏவுகணை வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் மாறுபட்ட தகவல்கள் வருகின்றன. இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.