எங்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்றால்...: இளைஞர்கள் விளக்கம்
டெல்லி: இளைஞர்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்றால் என்ன என்று பார்ப்போம்.
இந்தியாவின் 67வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திரம் என்றால் என்ன என்று இளைஞர்களின் கருத்து கேட்டறியப்பட்டது.
நான் நினைத்த இடங்களுக்கு சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் சென்று வர வேண்டும். யாரும் என்னை கேள்வி கேட்கக் கூடாது. பெண் என்பதால் என்னை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது. எங்கு வேண்டுமானாலும் செல்லவும், எதை வேண்டுமானாலும் செய்யவும் சுதந்திரம் வேண்டும் என்று டெல்லி பல்கலைக்கழக மாணவி இஷா கபூர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பின்றி பயத்தில் இருக்கையில் சுதந்திர தினம் கொண்டாடுவதில் பலனில்லை என்று பல மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
நினைத்த இடத்திற்கு செல்ல உரிமை இல்லை எனில் நம் மனதில் பயம் மட்டுமே உள்ளது. இதில் என்ன சுதந்திர தினம், என்ன சுதந்திரம் என்று கேட்கிறார் சட்டக் கல்லூரி பேராசிரியை ஜோதி.
நம் நாட்டில் சுதந்திரம் என்பது பெயருக்குத் தான் என்று பல இளைஞர்கள் கருதுகிறார்கள்.
நம் நாட்டில் சுதந்திரம் என்பதை விவரிப்பது கடினம். எனக்கு கலாச்சார சுதந்திரம் வேண்டும். எனக்கு பிடித்த கலாச்சாரத்தை பயமின்றி, எந்தவித குறுக்கீடும் இன்றி பின்பற்றும் உரிமை வேண்டும் என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகிலேஷ் மிஸ்ரா என்ற மாணவர் தெரிவித்தார்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர் பிபின் திவாரி கூறுகையில், சுதந்திரம் என்றால் அரசியல் சுதந்திரம். இந்திய அரசியல் அமைப்பு அளித்த சுதந்திரம் மட்டும் நமக்கு உள்ளது. அதுவும் வெறும் எழுத்து வடிவில் தான் உள்ளது. அப்பாவி ஐ.ஏ.எஸ் அதிகாரியான துர்கா சக்தி நாக்பால் உள்பட பலர் மீது குற்றம் சாட்டும் ஊழல் அரசியல் கலாச்சாரத்தில் இருந்து விடுதலை வேண்டும் என்றார்.
இந்த நாடு சுவாசிக்க நல்ல காற்று, அதுவும் மாசில்லா காற்றை அளித்தால் எனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம் என அரசியல் அறிவியல் மாணவர் சித்தார்த் சக்ரபர்தி தெரிவித்தார்.
உங்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்றால் என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.