சீனாவில், 8,600 ச.அடியில் 26வது ‘மொட்டை’ மாடியில் செயற்கை மலை: இடித்துத் தள்ள உத்தரவிட்ட நகராட்சி
பீஜிங்: சீனாவில், ஒரு கட்டிடத்தின் 26 வது மாடியில் செயற்கையாக அமைக்கப்பட்ட மலையால், அந்தக் கட்டிடத்தில் வசிக்கும் மனிதர்கள் அல்லலுக்கு ஆளாவதால் அதனை விரைவில் இடித்துத் தள்ள உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
நம்மூரில் இயற்கையாக அமைந்த மலைகளையே பாறைகளுக்காகவும், மரங்களுக்காகவும் சிதைத்து வரும் நிலையில் சீனாவில் இயற்கை விரும்பி ஒருவர் செயற்கையாக மலையொன்றை உருவாகியுள்ளார்.
தற்போது அதனை உடனடியாக அகற்றும் படி உத்தரவிட்டுள்ளதாம் அந்நாட்டு நீதிமன்றம்.
மொட்டை மாடி மலை...
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் அமைந்துள்ளது அக்கட்டிடம். 26 மாடிக்கட்டிடமான அதின் மொட்டை மாடி செயற்கையாக மலை போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
செயற்கை மலை...
கட்டடத்தின் மேல் மாடியில், 8,600 சதுர அடியில், செயற்கை மலையை உருவாக்கி, அதை சுற்றிலும் மரங்கள், நீருற்றுகள் போன்றவற்றை அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் செல்வாக்கு...
இக்கட்டிடத்தை 2007ம் ஆண்டு ஜாங் பிகுங் என்பவர் உருவாக்கினார். சீன மருத்துவரான ஜாங் முன்னாள் சட்டசபை ஆலோசகருமாவார். ஜாங்கின் அரசியல் செல்வாக்கு காரணமாக ஆரம்பத்தில் இக்கட்டிடத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை.
நீர் கசிகிற சுவர்கள்....
ஆனால், தற்போது, இந்த கட்டடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள நீருற்றுகள் போன்றவற்றால், கீழ் தளத்தில் குடியிருப்பவர்களுக்கு நிறைய பிரச்னைகள் உருவாகின்றனவாம். கட்டிடத்தில் நீர் கசிகிறதாம்.
இடிச்சுத் தள்ளுங்கப்பா...
குடியிருப்புவாசிகளின் புகாரை அடுத்து தற்போது, ஜாங் அமைத்த செயற்கை மலையை, இரண்டு வாரத்துக்குள் இடிக்கும்படி, நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இப்படி ஒரு கட்டிடம் கட்டப் போவதாக முன் கூட்டியே அனுமதி பெறவில்லை என ஜாங் மீது குற்றம்சாட்டியுள்ளனர் நகராட்சி அதிகாரிகள்.