இந்திய- பாக்.எல்லையில் ஜவான்களுடன் நரேந்திர மோடி!
பூஜ்: இந்திய -பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஒன்றான கட்ச் பிராந்தியத்தின் காவ்டாவில் எல்லைப் பாதுகாப்புப் படையினரை சுதந்திர தின நாளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
குஜராத் மாநிலத்தில் கட்ச் பிராந்தியம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியாகும். கட்ச் பகுதியில் மக்கள் வாழக் கூடிய கடைசி இடமான கவ்டாவில் போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ளது. அங்கு எல்லை பாதுகாப்புப் படையினர் முகாமும் உள்ளது. அதற்கு அப்பால் சதுப்பு நிலமாக, மணற்பாங்கான நிலமாக காட்சி தரும் ராண் ஆப் கட்ச் பிரதேசம்.
ராண் ஆப் கட்ச்-தான் இந்தியா- பாகிஸ்தாஅன் எல்லையாகும். பல நூறு கிலோ மீட்டர் மனித நடமாட்டமே இல்லாத பகுதியில்தான் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பூஜ் நகரில் இன்று சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. பின்னர் பூஜ் நகரில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கவ்டா பி.எஸ்.எப். முகாமுக்கு சென்றார். அங்கு போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய மோடி பின்னர் ஜவான்களுடன் உரையாடினார்.
மேலும் ஜவான்களின் முகாமுக்காக அமைக்கப்பட்ட புதிய குடிநீர் விநியோக குழாய்களையும் திறந்து வைத்தார் மோடி.