தூத்துக்குடி மணல் குவாரிகளில் மீண்டும் 2 நாட்கள் ஆய்வு.. ககன்தீப் சிங் பேடி
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கடல் தாது மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு தமிழக வருவாய்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் வருவாய்த்துறை, சுரங்கத்துறை, சுற்றுச்சூழல்துறை, நிலஅளவைத்துறை மற்றும் வனத்துறையினர் அடங்கிய சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
இதன்படி ஆய்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள திருநெல்வேலி மாவட்ட கோ ஆப்டெக்ஸ் பொதுமேலாளர் சாந்தகுமார் வேம்பார் பகுதியிலும், கடலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) மோகனசந்திரன் வைப்பார் பகுதியிலும், நாகப்பட்டணம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ரத்தினசாமி மணப்பாடு பகுதியிலும், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் லாரன்ஸ் மாதவன்குறிச்சி பகுதியிலும், திண்டுக்கல் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சக்திவேல் பெரியதாழை பகுதியிலும், விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செல்வநாதன் படுக்கப்பத்து பகுதியிலும் கடந்த 3 தினங்களாக ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.
அதிகாரிகள் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் மாவட்டத்தில் கடல் தாதுமணல் எடுப்பதற்கு குத்தகை விடப்பட்டுள்ள 6 இடங்களில் ஒரேநேரத்தில் மேற்கொண்ட ஆய்வுப்பணிகளை சிறப்பு ஆய்வுக்குழு தலைவர் ககன்தீப்சிங்பேடி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தனர்.
கடந்த 3 தினங்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுப்பணிகளை தொடர்ந்து சிறப்பு ஆய்வுக்குழு தலைவர் ககன்தீப்சிங்பேடி தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், அரசின் உத்தரவின்பேரில் மாவட்டத்திலுள்ள கடல்தாது மணல் குவாரிகளில் கடந்த 3தினங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப்பணிகளை தொடர்ந்து மாவட்டத்திலுள்ள கடல்தாது மணல் குவாரிகளில் வரும் 19, 20ம் தேதிகளில் மீண்டும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
பேட்டியின்போது கலெக்டர் மற்றும் ஆய்வுக்குழுவினர் உடன் இருந்தனர்.