உணவு பொருள் கடத்தலை துணிச்சலுடன் தடுத்த அதிகாரி சுகி பிரேமலாவுக்கு கல்பனா சாவ்லா விருது
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் கடத்தலை துணிச்சலுடன் தடுத்ததற்காக சுகி பிரேமலா என்ற அதிகாரிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கல்பனா சாவ்லா விருதை வழங்கினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருதுகள், தங்கப்பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி முதல்வர் ஜெயலலிதா சிறப்பித்தார்.
கல்பனா சாவ்லா விருது
துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா உணவு வினியோக அதிகாரி சுகி பிரேமலாவுக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அரிசி மற்றும் மண்எண்ணெய் கடத்தலை துணிச்சலுடன் பிடித்ததற்காக இந்த விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு தங்கப்பதக்கம், ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்கள் பெற்றார்.
கால்நடை, சுகாதாரம், வருவாய்த்துறைக்கு விருதுகள்
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்ககத்துக்கான விருது அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, துறை செயலாளர் விஜயக்குமார், இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர் விருது பெற்றனர். இந்த துறைக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதார பணியை சிறப்பாக செய்ததற்காக ரூ.2 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் கே.சி.வீரமணி, துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், டாக்டர்கள் முருகானந்தம், மகாலட்சுமி, வசந்தா, செம்மலர் சாந்தி பெற்றனர்.
இதேபோல் வருவாய்த்துறையில் குறை கேட்டு மனுக்கள் மீது துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்காக ரூ.2 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், செயலாளர் ககன்தீப்சிங்பேடி, கமிஷனர் ஸ்ரீதர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மாற்றுத் திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்ததற்கான விருதுகள் டாக்டர் ரமேஷ், கே.முரளி , ரமேஷ் டாக்டர் நெல்சன், விஜயன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தொண்டு நிறுவனங்களுக்கான விருதுகள்..
மகளிர் நலனுக்கு சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளர்களுக்கான விருதுகள் பெற்றோர் விவரம்:
விஜயா- விருட்சம் மகளிர் முன்னேற்ற களஞ்சியம், விருதுநகர் மாவட்டம். இவருக்கு 10 கிராம் தங்கப் பதக்கம் ரூ.10 ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வசந்தகுமாரி- ஊட்டி சரஸ் டிரஸ்ட். இவருக்கு சிறந்த சமூக பணியாளருக்கான விருது தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஈரோடு மாநகராட்சிக்கு விருது
சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருது ஈரோடு மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. மேயர் மல்லிகா பரமசிவம், கமிஷனர் விஜயலட்சுமி ஆகியோர் ரூ.25 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழ்கள் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு உடுமலைப் பேட்டை நகராட்சிக்கு வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் சோபனா, கமிஷனர் ஆகியோரிடம் ரூ.15 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
2வது பரிசு போடி நாயக்கனூர் நகராட்சிக்கு கிடைத்தது. நகரசபை தலைவர் பழனிராஜ், கமிஷனர் சசிகலா ஆகியோரிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
3வது பரிசு ஆற்காடு நகராட்சிக்கு வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் புருஷோத்தமன், கமிஷனர் பாரிஜாதம் ஆகியோரிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அவினாசி பேரூராட்சிக்கு விருது
சிறந்த பேரூராட்சியாக அவினாசி தேர்வு செய்யப்பட்டது. முதல் பரிசு ரூ.10 லட்சம் மற்றும் விருதுகளை தலைவர் விஜதோம்பாள், செயல் அதிகாரி கணேசன் பெற்றுக்கொண்டனர்.
2ம் பரிசு உத்தமபாளையம் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது. தலைவர் ஷகிலா பானு, செயல் அதிகாரி மனோ ரஞ்சிதம் ஆகியோர் ரூ.5 லட்சத்துக்கான காசோலை விருதுகள் பெற்றுக்கொண்டனர்.
3ம் பரிசு காவேரிப் பட்டினம் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது. தலைவர் வாசுதேவன், செயல் அதிகாரி கணேஷ் ஆகியோர் ரூ.3 லட்சம் காசோலை மற்றும் விருதுகள் பெற்றனர்.