சென்னையில் இன்றும் மழை... மக்கள் பாதிப்பு தொடர்கிறது
சென்னை: சென்னை நகரில் இன்று மழை அவ்வளவாக பெய்யாவிட்டால் தொடரும் மேகமூட்டத்தால் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் நிலை நீடிக்கிறது. நேற்றைய மழையால் இன்று சென்னைவாசிகள் சாலைகளில் பயணிக்க பெரும் சிரமப்பட்டனர்.
ஆந்திர கடலோரப் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சியால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
விடிய விடிய மழை.. பகலிலும் மழை
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை புதன்கிழமையன்று மாலை வரை நீடித்தது.
போக்குவரத்து ஸ்தம்பிப்பு
இதனால் சென்னையில் உள்ள பல முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை நகரில் மட்டுமின்றி புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
போக்குவரத்து பாதிப்பு
நேற்று மாலை வரையில் நுங்கம்பாக்கத்தில் 35.6 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 21.8 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
வாகனம் ஓட்ட முடியவில்லை
இம்மழையால் ஜவஹர்லால் நேரு சாலை, நியூ ஆவடி சாலை, எம்.டி.எச். சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளிலும் கோடம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம் பகுதிகளிலும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
14 இடத்தில் மரம் விழுந்தது
சென்னையில் பெய்த பலத்த மழையின் காரணமாக 14 இடங்களில் மரம் மற்றும் மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகளில் விழுந்த மரங்கள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன என்று சென்னை மாநகரட்சி தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் 9 செ.மீ மழை
சென்னையைப் போன்று, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலையில் 8 சென்டி மீட்டர் மழையும், செஞ்சியில் 7 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது
இன்றைய சென்னை
சென்னை நகரில் காலை முதல் தொடர்ந்து மேகமூட்டமே இருந்து வருகிறது. ஓரிரு இடங்களில்தான் தூறல் விழுந்துள்ளது. இருப்பினும் நேற்றைய மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.