தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1024 உயர்வு… வெள்ளியும் உயர்ந்தது
பங்குச் சந்தை மற்றும் ரூபாய் மதிப்பு சரிவால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
சென்னையில் அவ்வப்போது தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அண்மை காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வந்தது.இந்த நிலையில், தங்கத்தின் விலை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 1024 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு பவுன் தங்கம் 23,232 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2904 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 55 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 4085 ரூபாய் உயர்ந்து 51,385 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த வாரம் தங்கம், வெள்ளியின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது இதனையடுத்து ஆபரணத்தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக தங்க நகை வியாபாரிகளும், பொருளாதார வல்லுநர்களும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நுகர்வோர்கள் கலக்கம்
தங்கம் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சவரன் ரூ.19000 வரை குறைந்தது. இதனால் ஏராளமானோர் நகைகளை வாங்கத் தொடங்கினர். தற்போது அதிரடியாக ஒரு சவரன் ரூ.23 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதால் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.