இனி கொஞ்சமா பேசுங்க... செல்போன் அழைப்புக் கட்டணங்கள் 50% வரை உயருகிறது!
பார்தி ஏர்டெல், வோடாஃபோன், லூப் மொபைல் போன்ற சில நிறுவனங்களின் உரிமம் அடுத்த ஆண்டுடன் காலாவதி ஆகிறது. தற்போது அவை வைத்துள்ள ஸ்பெக்ட்ரம் அடுத்த ஆண்டுக்கு ஏலத்துக்கு வரும் நிலை உள்ளது.
அப்போது, இதற்கான ஏலத்தின் அடிப்படை விலை, 2008ல் இருந்தது போல, 11 மடங்கு கூடுதலாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என தொலைத் தொடர்பு வழிகாட்டு ஆணையமான ட்ராய், அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதனையடுத்து செல்போன் அழைப்பு கட்டணம் மற்றும் எஸ்எம்எஸ் கட்டணங்கள் 50 சதவீத அளவுக்கு உயரக் கூடும் என்று கூறப்படுகிறது. தற்போது ஒரு நிமிடத்துக்கு செல்போனில் பேச 90 காசு என்றிருந்தால், இனி ரூ.1.20 வரை உயரலாம் என்று கூறப்படுகிறது. செல்ஃபோன் கட்டணங்கள் நிமிடத்துக்கு 26 காசு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே இனி செல்போனில் அதிகம் பேசுபவர்கள் இப்போது முதலே பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் மாதந்தோறும் அதிக அளவில் செல்போனுக்கு பில் அழவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.