குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சுதந்திர தின நிகழ்ச்சியை பூஜ் நகரில் நடத்தியது ஏன்?
பூஜ்: குஜராத் முதல்வர் நரேந்திரடி சுதந்திர தின நிகழ்ச்சியை இந்திய-பாகிஸ்தான் எல்லையான கட்ச் பூஜ் நகரில் நடத்தியிருப்பதன் மூலம் தம்மை ஒரு தேசிய அளவிலான தலைவராக அடையாளம் காட்டியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இந்திய- பாகிஸ்தான் இடையே மோதல் என்பது பொதுவாக ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களையொட்டியதாக கருதப்படுவது உண்டு. நடைமுறையில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் எல்லைகளுக்கு இணையாக ஆபத்தமானதும் எளிதில் பாகிஸ்தான் தாக்குதலுக்குள்ளாகக் கூடிய இடமாகவும் இருப்பது கட்ச் பிராந்தியம்தான்.
குஜராத்தின் கட்ச் மாவட்டம்தான் இந்தியாவிலே மிகப் பெரிய மாவட்டமாகும். ஆனால் இதன் மொத்த பரப்பளவில் பாதி அளவில்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். எஞ்சிய பாதி அளவு மனிதர்கள் வாழத் தகுதியற்ற சதுப்பு மற்றும் மணற்பாங்கான பிரதேசமாகும். இதைத்தான் ராண் ஆப் கட்ச் என்று அழைக்கின்றனர். மழைக்காலங்களில் கடல் நீர் உள்புகுந்த பகுதியாகவும் கோடை காலங்களில் மணற்பாங்கான பாலைவனம் போன்றும் காட்சியளிக்கும். இந்த விரிந்த வெறும்பரப்பின் ஒருபகுதியில் பாகிஸ்தான் எல்லை தொடங்கிவிடுகிறது. இந்த பகுதியிலும் இந்திய வீரர்கள் ரோந்து பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது பூஜ் நகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் கவ்டா என்ற இடத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் முகாம் உள்ளது. இதைத் தாண்டிவிட்டாலே ராண் ஆப் கட்ச் தொடங்கிவிடும். இந்த ராண் ஆப் கட்ச் நடுவே மணற்பாங்கான சாலை அமைத்து அதன்வழியேத்தான் எல்லையில் உள்ள ராணுவத்தினருக்கான அனைத்து பொருட்களும் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தியா- பாகிஸ்தான் போர்களின் போது அதிகம் பதற்றம் உள்ள பகுதியாக, எளிதில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவக் கூடிய பகுதியாகவும் ராண் ஆப் கட்ச் இருந்ததுடன் தாக்குதலுக்குள்ளாகியும் இருந்தது. அத்துடன் கட்ச் மாவட்டத்தின் கடற்பரப்பின் ஊடேதான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவக் கூடிய சாத்தியங்களும் மிக அதிகமாக இருந்து வருகிறது.
இந்த பூஜ் நகரம் 2001ஆம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி வரலாறு காணாத பேரழிவை நிலநடுக்கம் மூலம் எதிர்கொண்டது. இதற்கு முன்பு 1800களில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தின் காரணமாக கட்ச் மாவட்டத்தின் லக்பதக் கோட்டை அருகே ஓடிக் கொண்டிருந்த சிந்து நதி அப்படியே பாகிஸ்தானுக்குள் இடம் மாறிப் போனது. இதனால் கட்ச் பிரதேசமே கைவிடப்பட்டதாகிப் போனாது.
அதன் பிந்தைய மிகப் பெரிய நிலநடுக்கம் 2001-ல் நிகழ்ந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அத்துடன் தற்போது வரை அடிக்கடி நிலநடுக்கங்களை எதிர்கொள்ளக் கூடிய பிரதேசமாகவும் கட்ச் பிரதேசம் இருந்து வருகிறது.
பொதுவாக அனைத்து மாநில முதல்வர்களுமே மாநில தலைநகரங்களில்தான் சுதந்திர தின விழாவை நடத்துவர். ஆனால் குஜராத் முதல்வர் மோடி மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நகரங்களில் சுதந்திர தின விழாவை நடத்தி வருகிறார்.
அதுவும் ஜம்மு காஷ்மீருக்கு இணையான கட்ச் பிராந்தியத்தின் பூஜ் நகரில் இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சியில் தாம் கலந்து கொண்டதுடன் கவ்டாவில் எல்லைப் பாதுகாப்பு படையினரை சந்தித்துப் பேசி தம்மை ஒரு மாநில முதல்வராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராகவும் அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார் மோடி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.