சுதந்திர தினத்தில் மது விற்ற நபர் கைது... டி.எஸ்.பி வெள்ளத்துரை நடவடிக்கை
மானாமதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த புலியூர் கிராமத்தில் சுதந்திர தினத்தன்று டாஸ்மாக்பாரில் மதுபானங்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
புலியூர் கிராமம் மதுரை எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தினசரி ஒரு லட்ச ரூபாய்க்கு குறையாமல் மதுபான வகைகள் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும். மேலும் அருகில் உள்ள கண்மாயில் மீன் பிடித்து சுடச்சுட விற்பனை செய்வார்கள் எனவே இங்கு மது குடிக்க கூட்டம் எப்போதும் அலைமோதும்.
இங்கு மதுரை பெருங்குடியைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் பாபு(38) பார் நடத்தி வருகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைபட்டிருக்க பாபு மட்டும் குடிமகன்கள் வசதிக்காக பாரில் சரக்குககளை வைத்து ஜோராக விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து டிஎஸ்பி வெள்ளத்துரைக்கு தகவல் கிடைக்கவே பாரில் சரக்கு விற்பனை செய்வது குறித்து திருப்புவனம் எஸ்ஐ ராஜேந்திரபிரசாத் மற்றும் போலீசாரை போய் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார். அப்போது பாரில் சைடு டிஷ்சுடன் விற்பனை சக்கை போடு போட்டு கொண்டிருந்தது.
பாரில் அப்போது சரக்கு விற்ற பணம் 29ஆயிரத்து 550ரூபாயும் 18 குவார்ட்டர் பாட்டில்களும் இருந்துள்ளது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்த போது போலீசாரிடம் பாபு தான் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உறவினர் என கூறி ஏகத்திற்கும் எகிறியிருக்கிறார். மிரண்ட போலீசார் திருப்புவனம் ஸ்டேசன் வரை வாங்க என கெஞ்சாத குறையாக அழைத்து வந்து டிஎஸ்பிக்கு வெள்ளைத்துரைக்கு தகவல் கொடுத்தனர். அவரிடமும் நத்தம் விஸ்வநாதனின் உறவினர் என கூறவே டிஎஸ்பி வெள்ளைத்துறை விசாரணை நடத்திய போது நத்தம் விஸ்வநாதனின் ஊர்க்காரர் என்று மட்டுமே தெரியவந்துள்ளது. வழக்கு பதிவு செய்த போலீசார் பாட்டில்களையும் பணத்தையும் பறிமுதல் செய்த சிறையிலடைத்தனர்.