தங்க நாணய விற்பனை இன்று முதல் நிறுத்தம்: வியாபாரிகள் அறிவிப்பு
சென்னை: சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் தங்க நாணய விற்பனை இன்று முதல் நிறுத்தப்படுகிறது. சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
அன்னிய செலவாணி பற்றாக்குறை அதிகரிக்க தங்க இறக்குமதி முக்கிய காரணமாக உள்ளதால் அதை குறைக்க அரசு தீவிரமாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவிகிதமாக உயர்த்தியது.
இந்த நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைக்கும் விதத்திலும், இந்திய பொருளாதார நலன் கருதியும் தங்க நாணயங்கள் விற்பனை நிறுத்துவதாக சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தங்க, வைர விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் பிலானி கூறுகையில்,
இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு விதித்துள்ள வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும். இருப்பினும் மத்திய அரசுக்கு உதவும் வகையில், வெள்ளிக்கிழமை முதல் தங்க நாணயம் விற்பனை நிறுத்தப்படும். இதனால் விற்பனையில் 25 முதல் 30 சதவீதம் பாதிப்பு ஏற்படும். அதேபோல் இறக்குமதியில் 25 முதல் 30 சதவீதம் குறைக்க முடியும்.
அந்நிய செலாவணி இழப்பீடை குறைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த திட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். மத்திய அரசு அறிவித்துள்ளபடி 20 சதவீத தங்கத்தை ஏற்றுமதி செய்தால், வருங்காலத்தில் இந்தியாவில் தங்கம் பற்றாக்குறை ஏற்படும். 7 சதவீத ஏற்றுமதிதான் சாத்தியமாகும் என்றும் தெரிவித்தார்