குப்பை கிடங்கில் வீசப்பட்ட ஆண் சிசு…
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் குப்பை கிடங்கில் வீசப்பட்ட ஆண் சிசுவை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
திருப்புவனம் சந்தை திடலில் வேன் ஸ்டாண்டு மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இதன் பின்புறம் குப்பை கிடங்கு உள்ளது. வியாழக்கிழமை காலை குப்பை கிடங்கில் உள்ள ஜவுளிகடை பையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. திடீரென குப்பை கிடங்கில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு ஆட்டோ டிரைவர்கள் சென்று பார்த்த போது பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண்குழந்தை இருந்துள்ளது.
திருப்புவனம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துவிட்டு குழந்தையை அரசு சமுதாய நல மையத்தில் அனுமதித்தனர்.மருத்துவர் அனிதா தலைமையிலான ஊழியர்கள் குழந்தையை சுத்தப்படுத்தி சிகிச்சையளித்தனர். குழந்தையின் எடை 2.5கிலோ இருந்ததாகவும், இரவு 10 மணியளவில் பிறந்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆட்டோ டிரைவர் ராமலிங்கம் கூறுகையில் ஜவுளிக்கடை பையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு திறந்த பார்த்தோம், ஆண் குழந்தை இருந்தது, அதனை மருத்துவமனையில் ஒப்படைத்தோம் என்றார். சுதந்திர தினத்தன்று குப்பை கிடங்கில் பிறந்த சில மணி நேரமே ஆன ஆண்குழந்தை வீசப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.