தங்கம் விலை இரண்டாவது நாளாக உயர்வு… சவரனுக்கு ரூ.520 அதிகரித்தது
சென்னை: தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்று 520 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று காலையில் 22 காரட் தங்கம் சவரனுக்கு 1024 ரூபாய் அதிரடியாக உயர்ந்தது. மாலையில் ரூ.840 ஆக குறைந்தது. ஒருசவரன் ரூ.23 ஆயிரத்து 48-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. 22 காரட் தங்கம் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 23,588 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தற்போது 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராமுக்கு 69 ரூபாய் உயர்ந்து 3150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 65 ரூபாய் உயர்ந்து 2946 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
7 மாதங்களில்
கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 24-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார காரணங்களால் தங்கத்தின் விலை ரூ.23 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது.
தங்கம் இறக்குமதி
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 500 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. முதலீடு அதிகரித்தன் விளைவாக கடந்த ஆண்டில் தங்க இறக்குமதி 1000 டன்னைத் தாண்டியது.
இந்த நிலையில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்ததால், தங்கத்தின் மீதான முதலீட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து, முதலீடு குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஒரு அவுன்ஸ் தங்கம்
வியாழக்கிழமை 1315 டாலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம், வெள்ளியன்று 1365 டாலர்களாக உயர்ந்தது. இதன் காரணமாகவே இந்திய சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக வர்த்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளன.
ஒரு பவுன் ரூ. 25000
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் சனிக்கிழமையும் அதன் விலை உயர்ந்துள்ளது. வரும் வாரத்திற்குள் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.25 ஆயிரத்தைத் தாண்டும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் அதிர்ச்சி
இந்த விலை உயர்வு நடுத்தர ஏழை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆவணி மாதத்தில் அதிக சுபகாரியங்கள் நடக்கும் என்பதால், தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த மக்கள் தங்கம் எப்படி வாங்குவது என்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர்.
வெள்ளியும் உயர்வு
சில்லறை விற்பனையில் வெள்ளி ஒரு கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து 55.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோவிற்கு 800 ரூபாய் அதிகரித்து 51,630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாளில் சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.