தங்கம் விலை கூடியாச்சு.. அடுத்தபடியாக 'அண்ணன்' பெட்ரோல், 'தம்பி' டீசல்!
இத்தோடு நிற்கப் போகிறதா நிலைமை.. இல்லையே..
இதோ அடுத்தபடியாக பெட்ரோல் விலையும் டீசல் விலையும் உயரப் போகிறது. 'இன்று நள்ளிரவு முதல் விலை உயர்வு அமல்' என்று விரைவிலேயே செய்தி வரப் போகிறது.
இது என்னாத்துக்கு?.. காரணம் இருக்கிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்குத் தான் நமது அன்னிய செலாவணியான டாலர்களில் பெரும் பகுதியை இந்தியா செலவழிக்கிறது. அடுத்த இடத்தைப் பிடிப்பது தங்கம் இறக்குமதி.
இப்போது ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டதால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவாகும் டாலர்களின் அளவு அதிகமாகிவிட்டது.
மேலும் உலகளவில் கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்துவிட்டது. கடந்த 13ம் தேதி நிலவரப்படி ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை ரூ. 6,588 ஆக இருந்தது. ஆனால், 15ம் தேதி அது ரூ. 6,680.5 ஆகிவிட்டது.
இதனால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியே ஆக வேண்டிய நிலைமைக்கு மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 வரையும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1 வரையும் உயரும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.
டீசல் விலையை ரூ. 3 உயர்த்தினால் தான் அதன் இறக்குமதி விலையை சமன் செய்ய எண்ணெய் நிறுவனங்களால் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரேயடியாக விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதிக்காது என்று தெரிகிறது.