கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்தியா பதிலடி!
பூஞ்ச்/டெல்லி: போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி கார்கிலிலும் இந்திய நிலைகளின் மீது தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ராணுவம். 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதியில் மீண்டும் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கார்கில் பகுதியில் உள்ள திராஸ் மற்றும் கக்ஸாரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய நிலைகள் மீது வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் படைகள் சிறிய மற்றும் தானியங்கி ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பகுதியில் திங்கள்கிழமை முதலே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
திராஸ் மற்றும் கார்கில் இடையே அமைந்துள்ள கக்ஸார் பகுதியில் உள்ள செனிகண்ட் நிலை மீது, பாகிஸ்தான் படையினர் திங்கள்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த இடம் மிக உயரமானது. பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஆதிக்கத்தில் உள்ளது. இங்கிருந்து தாக்கினால் காஷ்மீர் மற்றும் லடாக்கை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையைத் தகர்க்க முடியும். முன்பு 1999-ல் இங்கிருந்துதான் இந்திய ராணுவ அதிகாரி சௌரவ் காலியாவும், அவருடன் இருந்த வீரர்களும் பாகிஸ்தான் படையினரால் கடத்தப்பட்டனர்.
சில நாள்கள் கழித்து அவர்களது உடல்களை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் ஒப்படைத்தது. அவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அவர்களது உடலில் காணப்பட்ட கடுமையான காயங்கள் உறுதிப்படுத்தின.
கடந்த 1999-ல் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கார்கிலில் ஊடுருவியதும், இந்திய-பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே நேருக்கு நேர் சண்டை நடந்ததும், இறுதியில் பாகிஸ்தான் வீரர்கள் கார்கிலில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.
பாகிஸ்தான் துருப்புகள் சமீபகாலமாக காஷ்மீரின் ஊரி மற்றும் கெரான் பகுதிகளிலும், ஜம்மு மண்டலத்தில் பூஞ்ச் மற்றும் ஆர்.எஸ்.புரா பகுதிகளிலும் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானுக்கு இந்தியத் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என ராணுவ அமைச்சகம் பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.