அதிமுக பிரமுகரிடம் மோசடி செய்ததாக புதிய தமிழகம் எம்.எல்.ஏ. ராமசாமி மீது வழக்கு
திண்டுக்கல்: அதிமுக பிரமுகரிடம் ரூ 6.60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நிலக்கோட்டை தொகுதி புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. ராமசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அதிமுக முன்னாள் ஒன்றிய துணை செயலாளராக இருப்பவர் நாகராஜ். இவர் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில்,
நான், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அதிமுக முன்னாள் ஒன்றிய துணை செயலாளராக பதவி வகித்துள்ளேன். எனக்கும், புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை எம்.எல்.ஏ. ராமசாமிக்கும் பிஸினஸ் ரீதியாக பழக்கம் உள்ளது.
இந்த நிலையில், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மோம்பாட்டு நிதியிலிருந்து பணி ஒதுக்குவதாக கூறி, அதற்கான கமிஷனாக, ரூபாய் 11 லட்சத்தை வாங்கிக் கொண்டார்.
ஆனால், பல மாதங்கள் ஆன பின்னும் பணி ஒதுக்கப்படவில்லை. மேலும், கமிஷன் தொகை ரூபாய் 6.60 லட்சம் பணத்தைத் தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து, ராமசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.