பேஸ்புக் வீடியோ சாட்சி... சீக்கியத் தாத்தாவை தாக்கிய இங்கிலாந்து இளம்பெண் கைது
லண்டன்: இங்கிலாந்தில் இளம்பெண் ஒருவர் வயதான சீக்கியர் ஒருவரை தாக்குவது போன்று வெளியான பேஸ்புக் வீடியோ காட்சிகளைக் கொண்டு, அப்பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர் போலீசார்.
இம்மாதம் 10ம் தேதி இங்கிலாந்தின் கோவென்ட்ரி நகரில் உள்ள டிரினிட்டி தெரு பஸ் நிலையம் அருகில், 80 வயது சீக்கியர் ஒருவரை, அவ்வழியேச் சென்ற இங்கிலாந்தைச் சேர்ந்த 19வயது இளம்பெண் ஒருவர் கடுமையாக தாக்கி கீழே தள்ளினார். இதில் அவரது தலைப்பாகை கீழே விழுந்தது, அவரது மூக்கில் இருந்தும் ரத்தம் வந்தது. இதனை எதேச்சையாக வழிப்போக்கர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்தார்.
பின்னர் அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார் அவர். பேஸ்புக்கில் அக்காட்சிகளைப் பார்வையிட்ட பலர் அச்செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். போலீசாரின் கவனத்துக்கு வந்தது இந்தத் தாக்குதல் சம்பவம். பெச்புக்கில் பதிவாகியிருந்த அப்பெண்ணின் அடையாளங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை நேற்று போலீசார் கைது செய்தனர்.
தாக்குதலுக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடை பெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் அவரது குற்றம் நிரூபிக்கப் பட்டால், அந்த இளம்பெண்ணிற்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என போலீசார் தெரிவித்துள்ளன்ர்.
மேலும், இப்பிரச்சினை பெரிது ஆகாமல் தடுக்கும் வண்ணம் சமூக வலைதளங்களில் இருந்து சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க காவல் துறை சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.