ஆக.24ல் 367 இந்தியக் கைதிகளை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு
இஸ்லாமாபாத்: எல்லையில் தொடரும் பதட்டங்களுக்கு மத்தியில், வரும் 24ம் தேதி 367 இந்தியக் கைதிகளை விடுவிக்க இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
சென்ற வாரம், இந்திய எல்லையில் ரோந்து சென்ற 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றது. அதனைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
சில தினங்களுக்கு முன் கொண்டாடப் பட்ட 67வது சுதந்திரத்தின விழாவில் கூட இரு நாட்டுத்தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டனர். இந்நிலையில், அடுத்த மாதம் ஐ.நா. பொதுசபை கூட்டத்தின்போது, இருநாட்டு பிரதமர்களும் சந்திப்பது, நம்பிக்கையை உருவாக்குவதற்கும் உறவுகளை ஒருங்கிணைக்கவும் பயனுள்ள வாய்ப்பாக இருக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எல்லையில் தொடரும் பதட்டமான சூழலுக்கு மத்தியில், வரும் 24ம் தேதி பாகிஸ்தான் சிறையில் வாடும் 367 இந்திய கைதிகளை விடுதலை செய்ய இருப்பதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள்.
அதிகாரப்பூர்வமாக இந்தச் செய்தியை பாகிஸ்தான் அரசு விரைவில் அறிவிக்கும் என பாகிஸ்தான் நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.