ஏர் ஏசியா ரெடி.. நீங்க ரெடியா?
ஆசிய அளவில் மிகக் குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கி வரும் முன்னணி நிறுவனம்தான் மலேசியாவின் ஏர் ஏசியா. இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏர் ஏசியாவும் இந்தியாவில் கால் பதித்தது.
டாடா குழுமத்துடன் இணைந்து ஏர் ஏசியா இந்தியவில் குறைந்த கட்டண சேவையை தொடங்க முடிவு செய்து ஒப்பந்தமும் கையெழுத்தானது. தற்போது நவம்பர் மாதம் முதல் சேவையை ஏர் ஏசியா தொடங்க உள்ளது.
இதற்காக 2 விமானங்களை இயக்குவதற்கான விமானிகள், பொறியாளர்கள், விமான சேவை குழுவினர் என பலரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஏர் ஏசியாவின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மிட்டு சாண்டில்யா, விமான சேவை மார்க்கம், புறப்பாடு மற்றும் சென்றடைதல் நேரங்கள், செயல்படும் இடம் என அனைத்தும் தயாராக உள்ளது. நவம்பர் மாதம் எங்களது விமான சேவை தொடங்கிவிடும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
ஏர் ஏசியாவின் தலைமை நிதி அதிகாரியாக விஜய் கோபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் Ernst & Young நிறுவன கணக்கு தணிக்கையாளராக இருந்தவர். இதேபோல் தகவல் தொழில்நுட்ப குழுவின் தலைமை அதிகாரியாக கோ ஏர் நிர்வாகியாக இருந்த நதீம் பத்ரிகான் நியமிக்கப்பட்டுள்ளார். பொறியாளர் குழுவின் தலைவராக கஜபதி சம்பத் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
விமான சேவைகளுக்கான இயக்குநராக கேப்டன் அமித்சிங், தகவல் தொடர்புத் துறைக்கு நேகா மொகந்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 90 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏர் ஏசியாவுக்கான விமானிகள் கிங்பிஷர் மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸில் இருந்து எடுக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இண்டிகோ, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களில் இருந்து விமானிகளை ஏர் ஏசியா பணிக்கு எடுக்கவில்லை.