எல்லை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்... பாகிஸ்தானுக்கு ஆண்டனி எச்சரிக்கை
பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறல் தொடர்பாக மாநிலங்களவையில் அமைச்சர் ஏ.கே.அந்தோணி, விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சமீபகாலமாக பாகிஸ்தான் போர் ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லைப் பதற்றத்திற்கு பாகிஸ்தான் ராணுவமே முழு காரணம். இதனால் இரு நாடுகளின் அமைதி பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்படும் என்று கூறினார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்காமல் இந்தியா பொறுமையை கடைபிடிப்பதை பாகிஸ்தான் பலவீனமாக எடுத்துகொள்ளக் கூடாது. இனியும் எல்லை அத்துமீறல் தொடர்ந்தால் பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
நீர்மூழ்கி கப்பல் விபத்து
மும்பையில் வெடித்துச் சிதறிய கடற்படைக்கு சொந்தமான 'சிந்து ரக்ஷக்' என்ற நீர்மூழ்கி கப்பல் விபத்து குறித்து விளக்கம் அளித்த அந்தோணி, விபத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் விபத்தில் பலியான வீரர்களின் சடலத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் விபத்துக்கான முழு தகவல் வெளியாகும் என்றும் அமைச்சர் அந்தோணி கூறினார்.