மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்து தீர்மானம் வேண்டாம்.. பாஜக திடீர் உத்தரவு
டெல்லி: நரேந்திர மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக ஆதரித்து எந்த மாநிலத்திலும் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர்களுக்கு அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று டெல்லியில் நரேந்திர மோடியுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த உத்தரவை ராஜ்நாத் சிங் பிறப்பித்தார்.
நேற்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை பாஜக உயர் மட்டக் குழு எடுத்து அறிவித்துள்ளது. அதில் ஒன்றாகும் இது.
மோடிக்கு ஆதரவாக தீர்மானம் வேண்டாம்
நேற்றைய கூட்டத்திற்குப் பின்னர் மாநிலத் தலைவர்களுக்கு ராஜ்நாத் சிங் பிறப்பித்த உத்தரவில், மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தோ அல்லது ஆதரித்தோ தீர்மானம் எதையும் மாநில அளவில் நிறைவேற்றக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
பிறகு பார்த்துக் கொள்ளலாம்
இதுபோன்ற தீர்மானம் தொடர்பான முடிவு பின்னர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் எடுக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளாராம்.
பீகார் தீர்மானம் எதிரொலி
பீகார் பாஜக சனிக்கிழமையன்றுதான் மோடியை பிரதமர் வேட்பாளராக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றியது. இது சலசலப்பை ஏற்படுத்தியதால் இந்த அதிரடி முடிவை பாஜக தலைமை எடுத்துள்ளதாக தெரிகிறது.
பீகார் பாஜகவுக்கும் எச்சரிக்கை
இந்தத் தீர்மானம் தொடர்பாக பாஜக தலைமை மகிழ்ச்சி அடையவில்லை, மாறாக எரிச்சலுற்றுள்ளது. பீகார் பாஜக நிர்வாகிகளுக்கு குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரான சுஷில் மோடிக்கு அது எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்வானி, சுஷ்மா உள்ளிட்டோர் அதிருப்தி
மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தீர்மானம் போடுவதை அத்வானி, சுஷ்மா சுவராஜ் போன்றோர் எதிர்ப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் இப்படிப்பட்ட உத்தரவை ராஜ்நாத் சிங் பிறப்பித்துள்ளார் என்று தெரிகிறது.