நீங்களேதான் ஓட்டு போட்டீங்களா? கன்பார்ம் செய்ய 'பிரிண்ட்' அவுட் முறை.. நாகாலாந்தில் சோதனை முயற்சி!
கோஹிமா: தேர்தலில் நீங்கள்தான் வாக்களித்தீர்கள் என்பதை உறுதி செய்யும் வகையிலான பிரிண்ட் அவுட் முறையை நாகாலாந்து இடைத் தேர்தலில் சோதனை முயற்சியாக தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.
நாகலாந்து மாநிலத்தின் நோக்சென் சட்டசபை தொகுதிக்கு செப்டம்பர் 4-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வழக்கம் போல வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அத்துடன் ஒரு வாக்காளர் வாக்களித்த உடன் அவர் வாக்களித்துவிட்டார் என்பதை உறுதி செய்யக் கூடிய பிரிண்ட் அவுட் ஒன்றும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக சோதனை முயற்சியாக இது அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஆனால் அந்த பிரிண்ட் அவுட் வாக்காளரிடம் கொடுக்கப்படாமல் தேர்தல் ஆணையமே பாதுகாப்பாக வைத்திருக்குமாம்.
வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து சந்தேகம் எழுப்பியிருந்த பாஜக தலைவர் அத்வானி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் இத்தகைய பிரிண்ட் அவுட் நடைமுறையை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.