திருநெல்வேலி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு... கலெக்டர் உத்தரவு
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி அறிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தின் அருகே தச்சேரி என்ற கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரரான ஒண்டிவீரன் வசித்த இடம் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நேரில் சென்று மரியாதை செலுத்துவது வழக்கம்.
அந்த இடத்தின் அருகிலேயே சுதந்திர போராட்ட வீரரான பூலித்தேவன் நினைவிடம் உள்ளது. அந்த இடத்திற்கும் பல்வேறு சமுதாய அமைப்பினர் சென்று மரியாதை செலுத்துவார்கள்.
20.8.13 தினத்தன்று ஒண்டிவீரனின் நினைவு தினமும், செப்டம்பர் 1 ஆம் தேதி பூலித்தேவனின் நினைவு தினமும் அனுசரிக்கப்படவுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களில் மக்கள் வருவார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று உளவுத்துறையினர் அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தனர்.
இதையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சமயமூர்த்தி நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால், நெல்லை மாவட்டத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளி மாவட்டங்களில் இருந்து கூட்டமாக வாகனங்களில் மாவட்டத்திற்குள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.