இருகிராமத்தினர் இடையே மோதல்: 700 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு
சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே இருகிராமத்தினர் இடையே ஏற்பட்டு வரும் தொடர் மோதலால் வாழைத் தோப்பில் இருந்த 700 வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன் கோவிலை அடுத்த களப்பாகுளத்தில் கடந்த 16ஆம் தேதி அரசு பஸ் படிக்கட்டில் இருந்து பெருங்கோட்டூரை சேர்ந்த மாணவர்கள் கீழே இறங்க மறுத்ததால் இரண்டு கிராம மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில், பெருங்கோட்டூரை சேர்ந்த 24 மாணவர்கள் காயமடைந்தனர்.
இதேபோல் பெருங்கோட்டூர் வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தி களப்பாகுளத்தை சேர்ந்த விஜயகுமார் (27) என்பவரை அந்த கிராம மக்கள் தாக்கினர். இந்த சம்பவத்தை கண்டித்து இரண்டு கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மோதல் தொடர்பாக இரண்டு கிராமத்தைச் சேர்ந்த 291 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், களப்பாகுளத்தைச் சேர்ந்த அருள்ராஜ் (30) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் நிலவியதால் இரு கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், பெருங்கோட்டூர் கிராமத்தில் உள்ள தோட்டங்களில் சனிக்கிழமை நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் 700 வாழை மரங்களை வெட்டி சாய்த்தது. மேலும், பெருங்கோட்டூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் கோட்டூர்சாமிக்கு சொந்தமான 67 அகத்தி மரங்களும் வெட்டப்பட்டன. ஞாயிறன்று அதிகாலையில் தோட்டத்திற்குப் போய் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் பாதுகாப்பையும் மீறி வாழைகள் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.