வன்னியர்களை அவதூறாகப் பேசியதாக நடிகர் ஆனந்த்ராஜ் மீது புகார்
வந்தவாசியில்தான் இந்த சம்பவம் நடந்தது. கடந்த சனிக்கிழமையன்று அங்கு அதிமுக பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் முக்கூர் சுப்பிரமணியம் கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ஆனந்தராஜ் பேசுகையில்,டாக்டர் ராமதாஸை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு திரண்டு வந்த பாமகவினர் மேடை அருகே சென்று ஆனந்தராஜுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து எழுந்த அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம், வன்னியர் சமுதாயத்தினரைப் பற்றியும், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் குறித்து கடுமையாக பேசியதாக தெரிகிறது. இதனால் பரபரப்பு மேலும் கூடியது.
இதையடுத்து மாவட்ட பாமக தலைவர் சீனிவாசன் தலைமையில் பாமகவினர் போலீஸ் நிலையத்தில் முக்கூர் சுப்பிரமணியம், ஆனந்தராஜ் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளனர்.
போலீஸார் புகாரைப் பதிவு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.