இந்தியன் ஓவர்சீஸ்வங்கி சேவை 2–வது நாளாக முடங்கியது வாடிக்கையாளர்கள் அவதி...
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியும் ஒன்று. இந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளன. இந்த வங்கியின் சேவை நேற்று இந்தியா முழுவதும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
சர்வரில் ஏற்பட்ட கோளாறால் நேற்று முழுவதும் பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை. நேற்று காலை முதல் மாலை வரை பழுது சரி செய்யப்படாததால் பணம் டெபாசிட் செய்யவோ, எடுக்கவோ முடியவில்லை. பணப்பரிமாற்றம், வங்கி காசோலை பரிமாற்றம் போன்ற சேவைகள் அடியோடு பாதிக்கப்பட்டன.
இன்று 2-வது நாளாக இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர்கள் பணபரிமாற்றம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
சர்வரில் ஏற்பட்ட கோளாறு இன்னும் சரி செய்யப்படாததால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 100-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் 2 நாட்களாக காசோலை பரிமாற்றம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சென்னையில் உள்ள கிளைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. இது குறித்து நெல்லை மாவட்டத்தில் உள்ள வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில்,
சர்வர் கோளாறினால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேவை கடந்த 2 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இது எப்போது சீராகும் என்று தெரியவில்லை. வாடிக்கையாளர்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். அவர்களுக்கு விளக்கம் கூற முடியவில்லை. சர்வர் சரி செய்யப்பட்டவுடன் வங்கி சேவை தொடங்கும் என்றார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இரண்டு நாட்களா வங்கி நடவடிக்கைகளும், ஏடிஎம் சேவைகளும் முற்றிலும் முடங்கிவிட்டதால் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.