மோடியை புகழ்ந்த லாலு மைத்துனர் காங்கிரஸில் இருந்து நீக்கம்
பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மைத்துனருமான சாது யாதவ், மோடியைப் பற்றி கூறிய கருத்துகளுக்காக அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கபப்ட்டுள்ளார்.
முன்னாள் எம்.பி.யான சாதுயாதவ், கடந்த 2009-ம் ஆண்டு ராஷ்டீரிய ஜனதாதள கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். இவர் பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் ஆவார்.
சாதுயாதவ் கடந்த சில தினங்களுக்கு முன்னர், குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடியை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அது குறித்துக் கருத்துத் தெரிவித்த சாது யாதவ், ‘ராகுல்காந்தியை விட பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடியே தகுதியானவர். எனக்கு நாட்டின் நலம்தான் முக்கியம். மோடி எப்போதுமே நாட்டை பற்றியே பேசுகிறார். எனவே அவரால் நாடு பாதுகாப்பாக இருக்கும்' என மோடி புகழ் பாடியிருந்தார்.
காங்கிரஸ் கட்சியில்; இருந்து கொண்டு மோடி பிரதமராக வர வேண்டும் என சாது யாதவ் கருத்துக் கூறியது கட்சிக்குள் சலசலப்பை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் முடிவு செய்தது.
தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, சாதுயாதவ்வை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது காங்கிரஸ். இத்தகவலை பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவுத்ரி உறுதி படுத்தியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரேம் சாந்த் மிஸ்ரா தெரிவித்திருப்பதாவது, ‘சாது யாதவ் தேர்தலில் நிற்பதற்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் இப்படி கூறியிருக்கிறார்' என்றார்.