செய்யாறு.. இரவில் நடந்த பயங்கர விபத்தில் 5 பேர் பலி
செய்யாறு: செய்யாறு அருகே நடந்த பயங்கர விபத்தில் 5 பேர் பலியானார்கள். அவர்கள் வந்த ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டு விட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் ஒரு ஆட்டோவில் சென்னை தாம்பரத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக கிளம்பினர்.
நேற்று மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு பத்தே கால் மணியளவில் அவர்களது ஆட்டோ செய்யாறு, பாண்டியம்பாக்கம் கூட்டு ரோடு அருகே வந்தபோது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஆட்டோ மீது மோதி விட்டது.
இதில் ஆட்டோ நசுங்கிப் போய் அப்பளம் போல ஆனது. அதில் இருந்தவர்கள் உள்ளே சிக்கி அலறித் துடித்தனர். பேருந்து நிறுத்தப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் இறங்கி ஓடி வந்து ஆட்டோவுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் ஆட்டோவில் இருந்த ஒரு சிறுவன் உள்பட 4 பேர் சமபவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீஸார் வந்து காயமடைந்த மற்றவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். அதில் ஒருவர் வழியிலேயே உயிரிழந்தார்.
இறந்தவர்கள் 3 வயது கவியரசு, 19 வயது பபிதா, 40 வயது பனையூரம்மாள், 50 வயது தனம், 30 வயது ஆட்டோ டிரைவர் பிரகாஷ் என்று தெரிய வந்துள்ளது.
ரேகா மற்றும் இன்னொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.