அப்பாவா? காதலனா? - நாளை நீதிமன்றத்தில் சொல்கிறார் சேரன் மகள் தாமினி!
தாமினிக்கும் சந்துரு என்ற இளைஞருக்கும் கடந்த இரு ஆண்டுகளாக காதல். இதை இயக்குநர் சேரனும் அனுமதித்தார். ஆனால் பின்னர் சந்துருவின் தவறான வாழ்க்கை, அவர் குடும்பப் பின்னணி போன்றவற்றைக் காட்டி, காதலுக்கு அனுமதி மறுத்தார்.
ஆனால் தாமினி தந்தை பேச்சைக் கேட்கவில்லை. அப்பா தன் காதலுக்கு எதிரியாக இருப்பதாகவும் காதலனைக் கொல்ல முயல்வதாகவும் கூறி போலீசில் புகார் கொடுத்துவிட்டார்.
"நான் காதலுக்கு எதிரியில்லை. ஆனால் எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றுதான் நான் எதிர்ப்பார்க்கிறேன்," என்றார்.
இதையடுத்து சேரனின் மகள் தாமினிக்கு பெண் போலீசார் கவுன்சிலிங் அளித்தனர். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் காதலை பற்றி சிந்திக்கலாம் என்று அறிவுரை கூறினர். ஆனால் தாமினி காதலன் சந்த்ருவுடன்தான் செல்வேன் என்று பிடிவாதமாக கூறினார்.
இதனால் அவரை போலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர். இதற்கிடையே சந்த்ருவின் தாய் உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்து, 2 வாரங்கள் ஒத்தி வைத்த நீதிபதிகள், "2 வாரங்களுக்கு தாமினி, தான் படித்த பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்கி இருக்க" உத்தரவிட்டனர்.
இதன்படி கடந்த 2 வாரங்களாக தாமினி தனது குடும்பம் மற்றும் காதலனைப் பிரிந்து வெளியில் தங்கியுள்ளார். இடையில் இருமுறை காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார் இயக்குநர் சேரன்.
இப்போது இந்த வழக்கு நாளை (21-ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது தாமினி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
தனது மகள் மனம் மாறி எப்படியும் தன்னுடன் வந்து சேர்ந்து விடுவாள் என்று சேரன் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.
தலைமை ஆசிரியரின் வீட்டில் தாமினி தங்கி இருந்த போது அவருக்கு தினமும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தாமினி மனம் மாறியுள்ளாரா? அல்லது காதல்தான் எதிர்காலம் என்பதில் உறுதியாக உள்ளாரா என்பது நாளை தெரிந்துவிடும்.
ஒருவேளை நாளை நீதிமன்றத்தில் தனக்கு காதலன்தான் வேண்டும் என்று தாமினி உறுதியாக இருந்தால், நீதிமன்றத்துக்கு வேறு வழியில்லை, காதலனுடன் சேர்த்து வைப்பதைத் தவிர!