அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: அரசு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. இவர் தற்போது செய்தி துறை அமைச்சராக உள்ளார். அவரது வேட்பு மனுவில் தனது அசையா சொத்து மதிப்பு ரூ.29 லட்சத்து 38 ஆயிரம் என்று கூறியுள்ளார்.
கே.டி. ராஜேந்திர பாலாஜி தற்போது 34 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னந்தோப்பு வாங்கியுள்ளார். இது தொடர்பாக மதுரையை சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இந்த சொத்தின் மதிப்பு ரூ.6 கோடியே 60 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சராக இருக்கும் இவர் தனது பெயரில் சொத்து வாங்கும் போது மாநில ஆளுநரிடம் சட்டப்படி முன் அனுமதி பெற வேண்டும். சட்டப்பேரவை தலைவரிடம் இருந்தும் முன் அனுமதி பெற வேண்டும். அவர்களிடம் அனுமதி வாங்கியுள்ளாரா என்று தெரியவில்லை. மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வாங்கும் இவருக்கு இவ்வளவு மதிப்புள்ள சொத்து வாங்க பணம் எப்படி வந்தது என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இன்று இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதாகவும் இது குறித்து தமிழக அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.