கரூரில் திருமணமான 7வது நாளே பள்ளி ஆசிரியை காதலனுடன் ஓட்டம்
கரூர்: கரூரில் திருமணமான 7வது நாளே பள்ளி ஆசிரியை காதலனுடன் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தோகைமலையைச் சேர்ந்தவர் ராதிகா(23). அரசு பள்ளியில் தையல் ஆசிரியையாக இருந்தார். அவர் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்தார். கடந்த 2007ம் ஆண்டு ராதிகாவுக்கும், ரமேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ரமேஷ் இறந்துவிட்டதால் ராதிகா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமராஜ் என்பவரை திருமணம் செய்தார்.
பழனி கோவிலில் நடந்த திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டது. திருமணமான 7வது நாளில் ராதிகாவை காணவில்லை. அவர் தன்னுடன் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர் செந்தில் குமார் என்பவருடன் சென்றுவிட்டார் என்று கூறப்பட்டது.
மனைவியை காணாமல் ராமராஜ் தோகைமலை போலீசில் புகார் கொடுத்துவிட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராதிகா, அவரது பெற்றோர், செந்தில்குமார், ராமராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
விசாரணையின்போது ராமராஜ் தனது மனைவியுடன் வாழ விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் ராதிகாவோ செந்தில்குமாருடன் தான் வாழ்வேன் என்று அடம்பிடித்தார். இதையடுத்து ராதிகா பெற்றோர், கணவருடன் செல்லலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் ராதிகா செந்தில்குமாருடன் செல்வேன் என்று கூறியதால் அவரை மதுரை அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்றும், செந்தில்குமாருக்கு இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து தோகைமலை போலீசார் வரும் 21ம் தேதி அறிக்கை சமர்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.