நீரா ராடியா டேப் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த ரத்தன் டாடா
டெல்லி: நீரா ராடியாவிடம் தான் தொலைபேசியில் பேசியதை லீக் செய்தது தொடர்பான வழக்கு விசாரணையை பார்க்க டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உச்ச நீதிமன்றத்திற்கு வந்தார்.
2ஜி ஊழல் விவகாரத்தில் பெரிதாக பேசப்பட்ட கார்பரேட் லாபியிஸ்டான நீரா ராடியா குறித்து கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு சில புகார்கள் சென்றதால் அவரது தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டன. 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 60 நாட்களும், பின்னர் அக்டோபர் 19ம் முதல் மீண்டும் 60 நாட்களும் என மொத்தம் 180 நாட்கள் அவரின் தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் மீண்டும் 2009ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 2 மாதங்களுக்கு ரராடியாவின் தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்பட்டன. அப்படி பதிவான டேப்புகளில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா பேசியதும் பதிவானது. அந்த விவரங்கள் கடந்த 2010ம் ஆண்டு சில பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்களில் வெளியாகின.
இதையடுத்து டேப் விவகாரங்கள் லீக்கானது குறித்து அரசு சமர்பித்த அறிக்கையின் நகல் கேட்டு டாடா உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை பார்க்க அவர் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.