உங்க வீட்ல வெங்காயம் இருக்கா? திருடர்கள் உஷார்
மீரட்: தங்கம் போல விலையேறிவரும் வெங்காய விலையினால் மார்க்கெட்டிற்கு கொண்டு போகும் வெங்காயத்தைக்கூட வழிமறித்து கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டனர் திருடர்கள். ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞ்சாலையில் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஞாயிறன்று 40 டன் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு மீரட் நோக்கி ஒரு டிரக் சென்று கொண்டு இருந்தது. ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள சாக்புரா என்ற கிராமத்தின் அருகே வந்த போது மூன்று பேர் டாடா 907 வாகனத்தை வைத்துக் கொண்டு அந்த டிரக்கை வழி மறித்துள்ளனர்.
டிரைவரும், கிளினரும் சத்தம் போடவே அவர்களை தள்ளிவிட்டு விட்டு வெங்காயத்தை டிரக்கோடு அபேஸ் செய்து கொண்டு தப்பிவிட்டனர்.
உடனடியாக டிரைவரும் கிளீனரும் அருகில் இருந்த போலீஸ் ஸ்டேசனில் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து வயர்லெஸ் மூலம் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கோட் புலி என்ற இடத்தில் டிரக் சென்று கொண்டிருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
உடனடியாக திருடர்களை பிடித்து வேனை வெங்காயத்தோடு போலீசார் கைப்பற்றினர். அவர்கள் மீது எப்.ஐ.ஆர் போட்ட போலீசார் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் நீதிபதி குற்றவாளிகளை சிறையில் அடைக்க உத்தரவிட்டு விட்டு டிரக்கை விடுவித்தார். டிரைவரும், கிளீனரும் மகிழ்ச்சியோடு மீரட் நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
சில்லறை விலையில் வெங்காயம் கிலோ.100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் அதை மார்க்கெட்டுக்கு எடுத்து போகும் போது இனி போலீஸ் பந்தோபஸ்து போட வேண்டும் போலிருக்கிறதே!
உங்க வீட்ல வெங்காயம் ஸ்டாக் வச்சிருக்கீங்களா? அப்போ நீங்களும் உஷாரா இருங்க.